வியாழன், 17 நவம்பர், 2011

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 3


எதிர்காலத்தின் அணு எரிபொருள் : தோரியம்
கதிரியக்கப் பொருள்களில் குறைவாக அறியப்பட்ட ஓர் உறுப்பினரை நாம் அறிமுகம் செய்து கொள்வோம் – தோரியம். ஒருவேளை எதிர்காலத்தில் சாத்தியமான சிறந்த தீர்வாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு சிறந்த தேர்வாகவும் அது அமையும். தனிம அட்டவணையில் 90வது தனிமமான தோரியம் யுரேனியத்தைவிட சற்றே எடை குறைந்தது. தோரியம் ஏராளமாகக் கிடைக்கிறது – பாரம்பரிய அணு எரிபொருளான யுரேனியத்தைவிட நான்கு மடங்கு (xxvi) அதிகமாக.
தவிர, அதன் தூய்மையான வடிவத்தில் கிடைக்கிறது. மிஞ்சியிருக்கும் பெட்ரோலியம், நிலக்கரி, பிற தொல்லுயிரெச்ச எரிபொருட்கள் மற்றும் யுரேனியம் எல்லாவற்றையும் சேர்த்தால் கிடைக்கும் ஒட்டுமொத்த ஆற்றலை விட தோரிய இருப்பில் கிடைக்கும் மொத்த ஆற்றல் அதிகம் என நம்பப்படுகிறது.  உலகின் மிகப்பெரிய தோரிய இருப்பு – 6,50,000 டன்கள் – இந்தியாவில் இருக்கலாம் என IAEA அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (IAEA என்பது ச‌ர்வதேச அணு சக்தி முகமை. அணுசக்தித் துறையில் உலகின் ஒத்துழைப்பு மையம். இது 1957ல் ‘அமைதிக்காக அணுக்கள்’ என்ற அமைப்பாக ஐ.நா. குடும்ப அங்கமாகத் தொடங்கப்பட்டது).
மொத்த தோரிய இருப்பில் இது நான்கில் ஒரு பங்கை விட அதிகம். ஒப்பீட்டளவில் யுரேனிய மொத்த இருப்பில் 1 சதவிகிதத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. இது மூடிய எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பம் மூலம் திறம்படப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தோரியத்தால் வேறு பல நன்மைகளும் இருக்கின்றன. (இயற்கை) யுரேனியத்துடன்(xxvii) ஒப்பிடும்போது தோரியத்தால் (அதிலிருந்து தயாரிக்கப்படும் யுரேனியம்-233ன் வழியாக) ஒரு நிறை அலகுக்கு எட்டு மடங்கு அதிக மின்சாரம் தயாரிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிக அதிகம் விவாதிக்கப்படும் கழிவு வெளியேற்றத்திலும் தோரியத்தில் ஒப்பீட்டளவில் நன்மை அதிகம். தோரியம் வெளியேற்றும் கழிவுகளில் ஆக்டினைடுகள் (யுரேனியத்துடன் தொடர்புடையவை) இல்லாததால் ஒப்பீட்டளவில் இவை குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை.
அதே நேரம், யுரேனியத்திலிருந்து வரும் நீண்ட ஆயுளுடைய உயர் மட்டக் கழிவுகளை – குறிப்பாக ப்ளுடோனிய மற்றும் யுரேனிய மீட்புக்காக மறுபதனிடுதல் உள்ளிட்ட மூடிய எரிபொருள் சுழற்சியைப் பின்பற்றும் இந்திய வழிமுறைகளின் பின்புலத்தில் – இன்று கிடைக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டு சிறப்பாகக் கையாள‌ முடியும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான அந்தக் கழிவுகளைக் (1000 மெகாவாட் உலையிலிருந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள கழிவுகளுக்கு ஒரு கால்பந்து மைதானத்தில் கால் பங்கு அளவுள்ள ஒரு நீண்ட கால சேமிப்பு இடம் போதுமானது) கண்ணாடியாக்கி சுற்றுச்சூழலுக்கோ, மக்களுக்கோ எந்த ஆபத்தும் விளைவிக்காமல் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் என்று இந்திய அணு வல்லுனர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்.
திடீரென முளைக்கும் ஒரு கேள்வி – பிறகு, ஏன் தோரியத்தைக் காட்டிலும் யுரேனியமே உலகம் முழுக்க அணு ஆற்றல் திட்டங்களுக்கான‌ பிரபலத் தேர்வாக ஆனது? இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தொழில்நுட்ப ரீதியானது. மற்றது வரலாற்று ரீதியானது.
தொழில்நுட்பரீதியான காரணம் ஓர் எளிய உண்மையிலிருந்து கிளைக்கிறது. முதலில் ஒருவர் தோரியத்திலிருந்து யுரேனியம்-233ஐத் தயாரிக்க வேண்டும். இதற்கு இயற்கையில் கிடைக்கும் அணு எரிபொருளான யுரேனியம்-235 சார்ந்த உலைகள் தேவை. கூடுதலாக, கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்ப‌ட்ட தோரியத்தை பெரிய அளவில் மறுபதனிடுவதன் மூலம் யுரேனியம்-233ஐ மீட்பதும், கடின காமா கதிர்களை உமிழும் யுரேனியம்-232 இதில் இருக்க வாய்ப்பிருப்பதும் சில நடைமுறைச் சிக்கல்களை முன்வைக்கின்றன. ஆனால் வல்லுனர்களின் கருத்துப்படி இந்த எல்லாவற்றையுமே தொழில்நுட்பரீதியாக சமாளித்து விடலாம்.
தோரியம் சார்ந்த எரிபொருள் வழங்கும் பலமிருந்தும் முன்னேற்ற‌த்தின் ஏணியில் ஏன் தோரியம் பின் தங்கியது என்பதற்கான இரண்டாவதும் வரலாற்று ரீதியானதுமான காரணம், ஒப்பீட்டளவில் நிலையற்ற புவியியல் சார் அரசியல் நிலைமைகளின் சூழலைக் கொண்டு பார்த்தால் – தோரியத்தை ஆயுதமாக்க இயலாது. மின்சார மூலமாக இருப்பதும், அழிவுப் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப் படுவதும் என இரண்டுக்குமிடையே எப்போதும் கயிற்றின் மேல் நடப்பது போல் இருக்கும் யுரேனியம் போல் அல்லாது தோரியம் குண்டுகளை அப்படித் தயாரித்து விட முடியாது.
இங்குதான் வரலாறு உள்ளே வருகிறது. தற்போதைய ராணுவம் சாராத அணுப் பயன்பாடுகளில் கணிசமானவை பனிப்போர் காலத்து ராணுவ அணு தொழில்நுட்பங்களிலிருந்து நேரடியாகக் கிளைத்தவை என்பது நினைவு கூர வேண்டும். அணு தொழில்நுட்பத்தின் முதல் குறிப்பிடத்தக்க‌ வெளியீடு இரண்டாம் உலகப் போரின் போதான மான்ஹாட்டன் திட்டம். அது தான் இறுதியில் அமெரிக்காவின் 1945 ஹிரோஷிமா நாகாசாகி குண்டுவெடிப்பில் முடிந்தது.
அணு ஆயுதம் என்பது அணு உலையிலிருந்து வேறுபட்டது. முதலாவதில் அணு வினைகளை மட்டுப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ வேண்டிய அவசியமில்லை, அதனால் பேரழிவை விளைவிக்கும் ஆற்றல், குறுகிய கால இடைவெளியில் வெளிப்படும். அது தான் அணுகுண்டின் சாரமே. ஆனால் அணு உலையில் நீடித்து நிலைக்கும் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் வெளிப்படும்படியாக‌ மட்டறுத்தல் தேவைப்படுகிறது. 1951 தான் குறிப்பிட்டுச் சொல்லும் படியான கட்டுப்படுத்தப்பட்ட அணு மின்சார உற்பத்தி இடாகோவில் EBR-1 பரிசோதனை மூலம் 100 கிலோவாட் சக்தி தரும்படியாகச் செய்யப்பட்டது. அணுத் தொழில்நுட்பத்தில் இந்த “ஆயுதமே பிரதானம்” என்ற அணுகுமுறை தான் ஆயுதமாக்கவியலா தோரியத்தின் மேல் குறைந்த கவனத்தையும் ஆயுதமாக்கவியலும் யுரேனியத்தின் பால் மிகுந்த கவனத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது தோரியத்தின் பெரும் சொந்தக்காரனாகவும், வளர்ச்சிக்கு உகந்த பெரும் மின்சாரத்தேவை உடைய நாடுகளில் ஒன்றாகவும் நடப்பு அணுத் திட்டங்களைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்க இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பு. குறிப்பாக, நீண்ட கால நிலையான‌ தேர்வாக இருக்கும் தோரியத்தின் வழியில் சிறப்பு கவனத்துடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் இது ஏற்கெனவே நடந்து கொண்டும் இருக்கிறது. இந்தத் தேவைக்காக, இந்தியாவின் தற்போதைய திட்டத்தை – யுரேனியம் மற்றும் ப்ளுடோனியம் சார்ந்த எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பங்களும், இவை தோரியம் சார் உலைகளாக மாற்றமடையும் போது பெருமளவு தோரியத்தைக் கதிர்வீச்சுக்குட்படுத்தி யுரேனியம்-233 எரிபொருளை ஆக்குவதும் – தொடர்வது முக்கியமாகிறது.
இந்தியாவின் திட்டமான நவீன கன நீர் உலை (AHWR) உருவாக்குதல் இந்தியாவில் தோரியப் பயன்பாட்டின் ஆரம்ப நிலையில் ஒரு முக்கியப்படி என்பது குறிப்பிடத்தக்கது. தோரியத்தைப் பயன்படுத்தும் குறிப்பிடும்படியான அடுத்தகட்ட‌ முயற்சிகளுள் தோரியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட யுரேனியம்-233லிருந்து நிலையான‌ ஆற்றல் உற்பத்தி செய்யத் தேவைப்படும் வெப்ப மற்றும் வேக உலைகளும் அடங்கும்.
நம்பிக்கையூட்டும் எதிர்காலம் மிக்க ‌தோரியம் சார் உலைகளுக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு சோதனை அடிப்படையில் இந்தியா உட்பட உலகெங்கும் முயற்சிக்கப்ப‌ட்டு வருகிறது. முதலில் அதை வழக்கமான‌ உலைகளைக் கொண்டு அணுப்பிளவுறும் யுரேனியம்-233 ஓரகத்தனிமமாக உருவாக்குதல் அல்லது உருகிய உப்பு உலைகள் (MSR) போன்ற தொழில்நுட்பங்களின் மூலம் காற்றுடன் வினை புரியாமல், காற்றிலோ, நீரிலோ எரியாமல் உப்புகளைப் பயன்படுத்தி அணுப்பிளவுறும் பொருட்களை சேகரித்தல் ஆகியவை இதில் அடங்கும். இத்தொழில்நுட்ப‌த்தில் செயல்பாட்டு அழுத்தம் சாதாரண காற்றழுத்தத்துக்கு அருகில் இருக்கும். இதனால் கட்டுமானச் செலவும் குறைவு, அழுத்தத்தின் காரணமாக வெடிக்கும் அபாயமும் இல்லை(xviii).
அணு ஆற்றல் திட்டங்களின் தாய்த்திட்டமான அணு ஆயுதங்களின் வடிவில் குறிப்பிடத்தக்க அதிக அளவிலான உயர் திறனுடைய அணு பொருள்கள் இருக்கவே செய்கின்றன, அவற்றின் இருப்பு தொடர‌வே செய்யும். 2010ல் உலகின் ஒன்பது நாடுகளில் 22,000 அணு ஆயுதங்கள் இருந்தன. அவற்றில் 8,000 ஆயுதங்கள்(xxix) கட்டுப்படுத்தப்பட்ட அணு உலைகளைக் காட்டிலும் அதிக ஆபத்தைச் சுமந்த‌படி வெடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. அமைதியான மின்சாரத் தயாரிப்புத் திட்டத்தை நிறுத்துவதற்கு ஆபத்து என்ற வாதத்தைப் பயன்படுத்தினால், அணு எதிர்ப்புக் குழுக்கள் முதலில் அவர்களின் முயற்சியை – அழிவையே நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உலகின் 90 சதவிகித அணு ஆயுதங்களை வைத்திருக்கும் – வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் திருப்ப வேண்டும். அது நடக்குமா? கண்ணுக்கெட்டிய எதிர்காலத்தில் தெரியவில்லை. நமது நோக்கம் அணு சக்தியுடன் தொடர்புடைய ஆபத்துக்களைக் குறைப்பதே.
அணுக்கருவின் சக்தி மிகப்பெரியது. மனிதகுலத்தின் எதிர்காலம் அதை பாதுகாப்பாகவும் திறம்படவும் பயன்படுத்துவதில்தான் இருக்கிற‌து. வரும் ஆண்டுகளில் பூமி சார்ந்த தேவைகளுக்கு மட்டுமில்லாமல் நமது விண்வெளி திட்டங்களுக்கும் மற்ற கோள்களில் நமது நாகரிகம் குடியேறுவதற்கும் கூட அது தான் நமக்கு எரிபொருள். நமது தற்போதைய அணுத் திட்டங்கள் தோரியம் போன்ற மேம்பட்ட, பாதுகாப்பான பொருட்களுக்கு விரிவடையும். பிற்பாடு அணுக்கருப்பிணைவு போன்ற மேம்பட்ட அணு வினைகளுக்கு மாறும். இவை முழுமையாக உருவாக்கப்படும் போது தற்போதைய அணுச்சிதைவு முறைகளைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அணு மூலங்கள் தரும் சிக்கனமான, சுத்தமான, நிறைந்த மின்சாரம் தான் ஆரோக்கியமான, கற்றறிந்த‌, இணைக்கப்பட்ட ஓர் எதிர்காலத்துக்கான நமது நுழைவாயில் – விண்வெளியில் ஆழமாகச் செல்லும், தற்போதைய மனித கற்பனைகளின் எல்லைகளைத் தாண்டும் ஓர் எதிர்காலம்.
*
ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை இருந்தவர். அவரது மின்னஞ்சல் apj@abdulkalam.com
ஸ்ரீஜன் பால் சிங், Sustainable Development துறையில் வல்லுனர், மின் பொறியாளர், ஐஐஎம்ஏவில் எம்பிஏ பயின்றவர். அவரது மின்னஞ்சல் 7srijanpal@iimahd.ernet.in

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 2


அணு அபாயங்கள்
ஃபுகுஷிமா – டாய்ச்சி நிகழ்வுகளை நாம் அணு உலை விபத்துக்களின் வரலாற்றுச் சட்டகத்துள் வைத்து ஆராயவேண்டும். பெருமளவில் பொருட்சேதமும், அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பும் இருந்தாலும் விபத்தின்போதோ அதற்குப் பிறகான மீட்பு நடவடிக்கைகளின்போதோ நேரடியான உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கெட்டதிலும் ஓர் ஆறுதலான விஷயம், 1986 செர்னோபில் விபத்துடன் ஒப்பிடும்போது இந்த விபத்து கையாளப்பட்ட விதம், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அணு உலை அவசரநிலைகளின் போதான மேலாண்மையில் நாம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டியது. ஃபுகுஷிமா – டாய்ச்சி உலை, மின் உற்பத்தியில் கிட்டதட்ட ஐந்து மடங்கு பெரியது.
அதைவிட முக்கியமாக, விபத்தின்போது ஒன்பது மடங்கு அதிக அணு எரிபொருளைக் கொண்டிருந்தது. ஆனாலும், இடைப்பட்ட‌ வருடங்களில் அவசரநிலை மேலாண்மையில் நாம் கற்றுக் கொண்டதை வைத்து உச்சபட்சக் கதிர்வீச்சை செர்னோபில் விபத்தில் வெளியானதில் 0.4 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கட்டுப்படுத்த முடிந்தது. ஃபுகுஷிமா – டாய்ச்சி விபத்து துரதிர்ஷ்டவசமானது, ஆய்வுக்குட்பட்டது என்றாலும் அணு உலை அவசரநிலைகளைக் கையாள்வதில் தேசிய மற்றும் சர்வதேசிய வல்லமைகளை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அணுசக்தி விவாதங்களின்போது வைக்கப்படும் மற்றொரு வாதம், அணு விபத்துக்களின்போதும் அதற்குப் பிறகும் வெளிப்படும் கதிர்வீச்சினால் அந்தத் தலைமுறை மட்டுமல்ல, அடுத்து வரும் தலைமுறைகளும் பாதிக்கப்படும் என்பது. வெறும் ஊகங்கள், படக்கதைப் புத்தகக்‌ கற்பனைகளை விட கிடைத்திருக்கும் தகவல்களுக்கும், விஞ்ஞான விசாரணைகளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் தருவோமெனில், இந்த வாதம் எந்த வகையில் பார்த்தாலும் ஒரு புரட்டு என்பது நிரூபணமாகும்.
மனிதர்கள் கதிர்வீச்சுக்கு இலக்கானதற்கும், அழிவுக்கு உள்ளானதற்கும் வலுவான உதாரண‌ங்கள் என்றால் வாதத்துக்கு இடமின்றி 1945ன் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி அணுகுண்டு வீச்சுகள் தாம். இந்த இரண்டு சந்தர்ப்பங்களில்தான் அணுசக்தி வேண்டுமென்றே மனித அழிவுக்கெனத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. குண்டுவெடிப்புக்குப் பின், அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்கள் மத்தியில், க‌திர்வீச்சு தாமதமாக ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய 1946ல் அமெரிக்க அரசாங்கம் அணுகுண்டுவீச்சு பாதிப்பு கமிஷனை (ABCC) அமைத்தது. 30 வருடங்கள் அது இயங்கியது. பின் 1974ல், அமெரிக்க ஜப்பானியக்‌ கூட்டு முயற்சியாக, கதிர்வீச்சு விளைவுகள் ஆராய்ச்சி நிறுவனம் (RERF) என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டு, இன்றும் செயல்பட்டு வருகிறது.
ABCC மற்றும் RERF கடந்த அறுபது ஆண்டுகளாக பல தலைமுறைகளுக்கு மத்தியில், அணு விபரீதங்கள் மற்றும் கதிர்வீச்சின் நீண்டகால‌ விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து வெளியிட்ட கண்டுபிடிப்பு முடிவுகள் கதிர்வீச்சின் பாதிப்பு சாத்தியங்கள் மீது ஒளி பாய்ச்சி இருக்கின்றன.  நீண்ட கால (நிலையான‌) 100 மில்லிசீவர்ட்ஸ் (mSv – கதிர்வீச்சை அளப்பதற்கான சர்வதேச அலகு) அளவு கதிர்வீச்சுக்கு ஆளானால் புற்றுநோய் அபாயம் 0.5%- லிருந்து 0.7 % ஆக அதிகரிக்கும் என்கிறது அதன் ஆய்வறிக்கை. ஃபுகுஷிமாவைச் சுற்றிய நெருங்கிய வட்டாரங்களில் உச்சபட்ச கதிர்வீச்சு 800மில்லிசீவர்ட்ஸ்(xiv) என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர்வீச்சுக்கு ஆளாவதற்கும், புற்றுநோய் வருவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் – பரவலான நம்பிக்கைக்கு எதிராக – கதிர்வீச்சின் பாதிப்பு என்பது அதன் பாதிப்புக்குள்ளான தலைமுறைக்கானது மட்டுமே என கண்டுபிடிப்புகள் தெளிவாகச் சொல்கின்றன. ஆய்வறிக்கையிலிருந்து, ’இதுவரையிலான எங்கள் ஆராய்ச்சியில், கதிர்வீச்சுக்கு ஆளான‌ பெற்றோரிலிருந்து எந்த மரப‌ணு விளைவுகளையும் A-Bombல் பிழைத்தவர்களின் குழந்தைகளிடம் கண்டுபிடிக்கவில்லை.”(xv) (A-Bomb என்பது அணுகுண்டைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945ல் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி மீது இரு அணுகுண்டுகள் அமெரிக்காவால் போடப்பட்டன). அணுவிபத்துக்களின் போதான கதிர்வீச்சு ஆபத்தானது தான். ஆனால், அணுவிபத்துக்கள் வரும் தலைமுறைகளையும் பாதிக்கும் என்பது தவறான பிரச்சாரம். அதே சமயம், கடந்த தசாப்தங்களில் தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது, அணு விபத்துக்களைத் தடுக்கும் மனிதர்களின் வல்லமையும் நிச்சயம் மேம்பட்டு இருக்கிறது.
ஆற்றல் அடர்த்தி, மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தின் மீதான விளைவு, பொருளாதார பலன்கள் ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சிறந்தது அணுச‌க்திதான் என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது, இத்துறை தொடர்புடைய முக்கிய சவால்களைப் பார்க்கலாம். குறிப்பாக, சமீபத்தில் இயற்கைச்சீற்ற விபத்துக்குள்ளான ஃபுகுஷிமாவில் உள்ள‌ டாய்ச்சி அணு உலை எழுப்பியிருப்பவை. இரண்டு பிரச்னைகள் இங்கு முக்கியமானவை. முதலாவது, விபத்தின் போதான உலையின் பாதுகாப்பு. இரண்டாவது, உலை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அணுக்கழிவுகள் தொடர்புடையது.
இரண்டாவது பிரச்னையை முதலில் பார்ப்போம்.
அணு ஆற்றலின் பிற வாய்ப்புச் செலவு
அ) அணுசக்தியைத் தவிர்ப்பது என்பது தர்க்கரீதியான மாற்றை முன்வைக்காத‌ ஓர் அரைகுறை எதிர்வினை. மாற்று நடவடிக்கைகளுக்கான முழுமையான சித்திரத்தைப் பார்த்தோமென்றால் தற்போதைய மற்றும் எதிர்கால ஆற்றல் தேவைகளை அடைவதை நாம் ஆதரிக்கத்தான்வேண்டும்.
பொருளாதாரத்தில் “பிறவாய்ப்புச் செலவு” என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. அடுத்த மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கும் போது ஆகும் செலவு. ஒட்டுமொத்த அணு ஆற்றல் தயாரிப்புக்கும் நாம் தடை விதித்தால் என்ன ஆகும்? எதிர்காலத்தேவையில் கொஞ்சம் பகுதி – அது சிற்றிலக்கமாக இருந்த போதிலும் – சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலங்களிலிருந்து வரும். முன்பே குறிப்பிட்டது போல், பெரும் நிச்சமற்ற தன்மையுடன். நீர் மின்சாரமும் குறையும் ஒரு பகுதியை நிரப்பும். ஆனால், எல்லா சாத்தியங்களையும் வைத்துப் பார்த்தால், குறைந்தபட்சம் சமீப‌ மற்றும் மத்திம எதிர்காலத்தில் – தொல்லுயிரெச்ச எரிபொருள் சார்ந்த மின்சார தயாரிப்பு முறைகளை நாம் சார்ந்திருக்கும் நிலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். ஆனால் அங்கே தான் பிரச்னையே இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் மனித இனத்தின் செயல்பாடுகளால் 3000 கோடி டன்கள்(xvi) கொண்ட கரியமில‌ வாயு காற்று மண்டலத்தில் கலக்கிறது. அதில் 26 சதவிகித வெளியீடு (760 கோடி டன்கள்) மின் உற்பத்தி தேவைகளின் நேரடி விளைவுகளினால் ஏற்பட்டவை என IPCC மதிப்ப்பிட்டிருக்கிறது. இதனால் காற்று மாசடைதல் மட்டுமல்ல, மழை வரத்து, கடல் மட்டம், வெப்பநிலை ஆகிய‌வற்றை பாதிக்கும் வானிலை மாற்றங்களையும் தூண்டும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, நோய்வாய்ப்படுதல் மாற்றங்கள் ஆகியன நிகழும். நகர்ப்புற,‌ வெளிப்புற‌ காற்று மாசு படுதலால் மட்டும் 13 லட்சம் பேரும் (xvii), வானிலை மாற்றங்களுக்கு ஒத்துப்போக இயலாமல் 1,40,000 பேரும் உயிரிழப்பதாக(xviii) உலக சுகாதார மையம் மதிப்பிட்டிருக்கிற‌து. (இது தவிர, 20 லட்சம் பேர் உள்ளக‌ மாசுபடுதலால் உயிரிழக்கின்றார்கள். இவர்களில் கணிசமானோர் பெண்களும், ஐந்து வயதுகுட்பட்ட குழந்தைகளும்).
மின் தயாரிப்பு செயல்பாடுகளின் காரணமான‌ மாசுபடுதல் மற்றும் தொடர்புடைய வானிலை மாற்ற‌ங்கள் நேரடியாகவோ, மறைமாகவோ 4,81,000 மரணங்களை ஒவ்வோர் ஆண்டும் ஏற்படுத்துகின்றன. ஒப்பீட்டளவில் செர்னோபிலில் நடந்தது, மிக மோசமான ராணுவம் சாராத அணு விபத்து. 4000 பேர் வரையிலான‌ புற்றுநோய்(xix) (கணிசமானவை குணப்படுத்தக்கூடியவை) பாதிப்புகளையும், 57 நேரடி பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் கதிர்வீச்சு விளைவுகள் விஞ்ஞான கமிட்டி (UNSCEAR) கணக்கிட்டிருக்கிறது. அசுத்த தொல்லுயிரெச்ச ஆற்றல் எதிர்காலத்தில் நிலைக்காது. அதைத்தவிர தொல்லுயிரெச்ச எரிபொருள் வேகமாகத் தீர்ந்து வருகிறது. அதன் பற்றாக்குறை புவியியல் சார் அரசியல் நிலையாமைகளை உலகெங்கும் உருவாக்கி வருகிறது.
மாசுபாடு, வெளிப்புறம் மற்றும் உள்ளகம்
நகர்ப்புற வெளிப்புற மாசுபாடு (UOP): இது நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பொதுவாக, திறந்த வெளிகளில் – உதாரணம்: சாலைகள் – வாழும் மக்கள் அனுபவிக்கும் காற்று மாசுபாட்டைக் குறிக்கிறது. உள்ளகக் காற்று மாசுபாடு (IAP) பொதுவாக, திறமில்லாத எரிபொருள் நுகர்வு, ரசாயன மாசுபாட்டுக்குள்ளாகும் கட்டடப் பொருள், மற்றும் இன்ன பிற காரணங்களால் உட்புறத்தில் காணப்படும் மாசுபடுத்தும் விஷயங்களைக் குறிக்கிறது. IAPக்கு UOPயும் பங்களிக்கிறது. கிட்டதட்ட இருபது லட்சம் பேர் உள்ளகக் காற்று மாசுபாட்டின் காரணமாக உயிரிழக்கிறார்கள். இதில் மிக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும்.
இது தவிர, மாறி வரும் வானிலை எதிர்காலத்தில் பெரும் ஏற்பு விலைப் பட்டையோடு வரும் என நம்பப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் பெரும் தொகையான 30,000 கோடி டாலர்கள். இது உலக GDPக்கு(xx) பெருத்த இழப்பாக இருக்கும். நாம் டைப்-0 வகை எரிபொருள்களிலிருந்து வெளியேறி அடுத்த தலைமுறை எரிபொருள்களுக்கு – இவற்றில் மிக முக்கியமானது அணு எரிபொருள், இது நம் எதிர்கால விண்வெளித் திட்டங்களூக்கும் பக்கபலமாக இருக்கும் – மாறினால் தான் அத்தனை பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். 1000 மெகாவாட் நிலக்கரி மின் நிலையத்துக்கும், அணு உலைக்குமான தோராய தர ஒப்பீடு அட்டவணை-1ல் தரப்பட்டுள்ளது.
அணுசக்தியின் பாதுகாப்பு பிரச்னைகள்
 ஆ) இப்போது, நாம் மற்ற பிரச்னையான உலை பாதுகாப்பை ஆழமாகப் பார்ப்போம். அணு மின்சார உற்பத்தியின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் நான்கு பெரிய உலை விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1957ல் எரிபொருள் மறுபதனிடுதலில் நடந்த‌ கைஷ்டைம் விபத்து, ஒப்பீட்டளவில் சிறிய மூன்று மைல் தீவு உருகிய விபத்து (அமெரிக்கா), மிக‌ப்பெரிய செர்னோபில் விபத்து (சோவியத் யூனியன், 1986) மற்றும் சமீபத்தில் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த விபத்து. முதல் விபத்து முழுக்க அரைகுறை தொழில்நுட்பத்தினால் நடந்தது. அடுத்த இரண்டு விபத்துக்களும் மனிதத் தவறுகளினால் நடந்தவை. 2011ன் ஃபுகுஷிமா விபத்துகூட அசாதாரண இயற்கை சீற்றத்தால் நடந்தது. பிரமாண்ட நில நடுக்கத்தின் அழுத்தச் சுமையும், முன் நிகழ்திராத சுனாமியின் நறுக்குச் சுமையும் இணைந்தது அரிதான நிகழ்வு.
அதே சமயம் உலகெங்கும் மேம்பட்ட தொழில்நுட்பமும் நிலையான உலை வடிவமைப்பும் நிச்சயம் தேவை. அறுபது ஆண்டுகளில் நடந்த நான்கு விபத்துகள் – தொல்லுயிரெச்ச கீழ்நிலை எரிபொருள்களைத் தாண்டிச்செல்ல‌ முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும் – இத்தொழில்நுட்ப‌த்தையே முழுமையாக‌க் கைவிடக் காரணமாகி விட‌க்கூடாது. மனித இனத்தின் மகத்தான நண்பனாக‌ இருக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மிகச் சிறப்பானவை கூடுதல் ஆபத்துடன்தான் வரும். கற்றலின் வாயிலாக அந்த ஆபத்தைக் தணிக்கும் முறைகளை உருவாக்குவதுதான் சரியான வழியே தவிர முதல் விபத்தைக் காரணம் காட்டி விஞ்ஞானத்தையே கலைத்து விடுவதல்ல.
சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். 1903ல் ரைட் சகோதரர்கள் மனிதர்கள் விமானத்தில் பறக்கும் அற்புதமான கனவை உண்மையாக்கினார்கள். அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 1908ல் முதல் விமான விபத்து நடந்தது. அதில் ஆர்வில்லி ரைட் படுகாயமடைய, உடன் பயணித்தவர் உயிரிழந்தார். நிறைய விபத்துகள் தொடர்ந்தன. இன்றைய தேதியில் கூட விமான விபத்துக்கள் ஒவ்வோர் ஆண்டும் 1,500 பேரை பலி வாங்குகிறது. 1908 விபத்தையோ, அதற்குப் பிற்பாடு நடந்தவற்றையோ காரணமாகக் காட்டி மனிதர்கள் பறப்பதைத் தடை செய்திருந்தால் நாம் தூரத்து நகரங்களிடையே, கடல்கள், கண்டங்கள் கடந்து பறந்து கொன்டிருக்க முடியுமா? 1912ல் பிரமாண்ட கப்பலான டைட்டானிக் கிளம்பிய‌போது பெரிய சொகுசுக் கப்பல்களின் துறையில் ஒரு முன்னோடித் திட்டமாகக் கருதப்பட்டது. ஆனால், தன் முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் போதி மூழ்கியது. 1,500 பேர் – கப்பலிலிருந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் – உயரிழந்தார்கள். ஆனால், மிகப்பெரிய அதிவேக ச‌முத்திரப் பயணங்களுக்கான தேடலை அது நிறுத்தி விடவில்லை.
மனிதனை நிலவுக்கு அனுப்பும் முதல் திட்டமான அப்போலோ-1 விபத்தில் சிக்கி, மூன்று முக்கிய விண்வெளி வீரர்களைப் பலி வாங்கியது. அடுத்து, 10 திட்டங்கள் கலவையான முடிவுகளை சந்தித்தபின், 1969ல் தான் அப்போலோ-11 இறுதியாக நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் பரப்பில் கால் பதித்ததும் அந்த மறக்கமுடியாத சொற்களை உலகுக்கு அறிவித்தார், “மனிதனுக்கு ஒரு சிறிய அடி; மனித இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்.” உண்மையில் அந்தச் சிறிய அடிக்கு முன்பாக பல தடுமாற்றங்கள் இருந்தன.
தற்போது உலகின் சிறந்தவற்றுள் ஒன்றாக வரிசைப்படுத்தப்படும் இந்திய விண்வெளித் திட்டம், 1978ல் ஒரு தோல்வியுடன்தான் தொடங்கியது. எங்கள் முதல் ஏவுகணை செயற்கைக்கோளை பூமிக்கு அருகிலான நீள்வட்டப்பாதையில் எடுத்துச் செல்வதற்குப் பதிலாக வங்காள விரிகுடாவில் விழுந்தது. நான் அந்த ஏவலின் திட்ட இயக்குநராக இருந்தேன். சில கோடிகளை கடலில் எறிந்தோம் எனத் தூற்றப்பட்டோம். அந்த ஒரு விபத்தோடும், விமர்சன‌ங்களோடும் எங்கள் கனவுகளை நாங்கள் முடித்துக் கொள்ளவில்லை. திட்டம் தொடர்ந்தது. அடுத்த வருடமே நாங்கள் வெற்றியடைந்தோம். தோல்வியோடு தொடங்கப்பட்ட அந்தத் திட்டம்தான் இன்று தனது சந்திரயான் திட்டம் மூலம் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கும் முதல் மற்றும் ஒரே திட்டம். தற்போது இது தேசத்தின் பெருமை. நிச்சயம் எல்லாத் தோல்விகளும் விபத்துகளும் செம்மையான சேவை புரிவதிலும் மேம்பட்ட பாதுகாப்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் நம்மை சிந்திக்க வைக்க‌ உந்துதலாக அமைகின்றன‌ என்பதுதான் வாதம். அணு சக்தி விஷ‌யத்தில் கதிர்வீச்சின் விளைவுகள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவைதாம். ஆனால், நமது அடுத்த அடி மேம்படுத்துதல்தானே ஒழிய தப்பித்தல் அல்ல.

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 1


நவம்பர் 6, 2011 தேதியிட்ட The Hindu நாளேட்டின் சென்னைப் பதிப்பில் ஏவுகணை விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம், ஸ்ரீஜன் பால் சிங்குடன் இணைந்து இந்தியாவின் எதிர்காலத்துக்கு அணுசக்தியின் அவசியம் குறித்து Nuclear power is our gateway to a prosperous future என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதி இருந்தார் (பக்கம் 14, 15). அதன் தமிழ் மொழியாக்கம் இது. கட்டுரையின்ஆங்கில மூலம் இங்கே உள்ளது.  தமிழில் மொழிபெயர்த்தவர் : சி. சரவணகார்த்திகேயன்
அணுசக்தியே வளமான எதிர்காலத்துக்கான நமது நுழைவாயில்
• ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் & ஸ்ரீஜன் பால் சிங் •
0
பிரபஞ்சத்திலிருக்கும் ஒவ்வொரு அணுவும் நியூக்ளியஸ் எனப்படும் கற்பனைக்கெட்டாத‌ சக்தியுடைய மின்கலத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது. இந்த வகை ஆற்றல் டைப் – 1 என்று அழைக்கப்படும். இது டைப் – o எரிபொருள்களைவிட பல லட்சக்கணக்கான மடங்கு கூடுதல் சக்தி வாய்ந்தது. டைப் – 0 எரிபொருள் என்பது அடிப்படையில் மரித்த தாவரங்களும் விலங்குகளுமாகும். இவை, நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இன்ன‌ பிற மரபான (conventional) எரிபொருள்கள் போன்ற வடிவங்களில் கிடைக்கும்.
விஷயத்தைப் புரிந்து கொள்ள மரபான எரிபொருள் – சுமார் 10,000 டன் நிலக்கரி – சுமந்த 50 சரக்குப் பெட்டிகளைக் கொண்ட ஒரு கிலோ மீட்டர் நீள ரயிலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய காரின் டிக்கியில் அடைத்துவிட முடிகிற 500 கிலோ (i) டைப்-1 எரிபொருளால் – இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் – அதே அளவு ஆற்றலை உற்பத்தி செய்யமுடியும். தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் போது இயற்கையில் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். சில மதிப்பீடுகளின் படி (ii), இந்த வகையில் இன்னும் குறைவான அளவே தேவைப்படும் – ஒரு சிறிய பையில் (iii) வைத்துவிடக்கூடிய 62.5 கிலோ அல்லது அதற்கும் குறைந்த அளவு. (குறிப்பு: 500 கிலோ இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 3.5 கிலோ யுரேனியம்-235 எரிபொருள் இருக்கும்.)
ஆற்றலும் பொருளாதாரமும்
முன்னேற்றத்தின் ஏணியில் ஏறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் அல்லது தேசத்துக்கும் மிக அடிப்படைத் தேவை, ஆற்றல். ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்றத்தை எட்டிய பிறகே அதன் ஆற்றல் தேவை நிலை பெறும். ஒரு தேசத்தின் ஆற்றல் நுகர்வுக்கும் வருமானத்துக்கும் – பஸ்பரம் வலுப்படுத்திக்கொள்கிற – தனித்துவமான, ப‌குக்கப்பட்ட ஒரு தொடர்பு இருக்கிறது. உங்களைச் சுற்றிப் பாருங்கள்: முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியும் ஆற்றல் தேவையை சேர்த்துக் கொண்டே வருகிறது – போக்குவரத்துக்கு கார்கள், கப்பல்கள், விமானங்கள், தரமான வைத்திய வசதிக்கு மருத்துவமனைகள், இணைய தொடர்பைப் பயன்படுத்தும் கல்வி, அதிகரித்த, சிறப்பான‌ பொருள் உற்பத்தி, மேம்பட்ட விவசாயத்துக்கு நீர்ப்பாசனம். நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் ஆற்றல் அடர்வு மிக்கதாக ஆகி வருகிறது. முன்னேற்றத்துக்குத் தேவையான முன்நிபந்தனை அது. தேசவாரியான தனி நபர் சராசரி ஆற்றல் நுகர்வு இதனை தெளிவாக பிரதிபலிக்கிறது – உதாரணமாக ஓர் அமெரிக்கனின் ஆற்றல் நுகர்வு ஓர் இந்தியனுடையதைக் காட்டிலும் 15 மடங்கு அதிகம் (படம் 1ஐப் பார்க்கவும்) (iv).
இன்று இந்தியா பொருளாதார பலப்படுத்துதலில் அதிவேக ஏறுமுகக் கட்டத்தில் தன்னை வைத்துக் கொண்டிருக்கிறது. தாராளமயமக்கலுக்குப் பின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் அதிக தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. வரும் பத்தாண்டுகளில் நமது நோக்கமெல்லாம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும், பொருளாதார உணர்ச்சிப் பொறிகளாக 75 கோடி மக்கள் வாழும் 6 லட்சம் கிராமங்களை முன்னேற்றுவதும் ஆகும். 2008ல் ஒரு லட்சம் கோடி டாலர் நிலையைக் கடந்தோம். அந்த மைல்கல்லை அடைய நமக்கு அறுபது ஆண்டுகள் பிடித்திருக்கிறது. இருப்பினும் இந்தியப் பொருளாதாரம் 2016ல் இரட்டிப்பாகி, 2 லட்சம் கோடி டாலர் நிலையையும், 2025ல் அதுவும் மறுபடி இரட்டிப்பாகி 4 லட்சம் கோடி டாலர் மைல்கல்லையும் அடையும் என கணிக்கப் பட்டுள்ளது (v). இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிற‌து. 2030ம் ஆண்டில் மொத்த மின்சாரத் தேவை தற்போதைய 1,50,000 மெகா வாட்டிலிருந்து 9,50,000 மெகாவட்டாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது (vi). இதுவும் தற்போதைய அமெரிக்க தனி நபர் ஆற்றல் தேவையில் நான்கில் ஒரு பங்கை விடக் குறைவு தான். 2050ல் தேவை இன்னமும் அதிகரித்து, தற்போதைய பிரெஞ்சு அல்லது ரஷ்ய அளவான தனிநபருக்கு 6000 வாட்கள் என்பதை அடையும்.
அணு ஆற்றலின் சர்வதேச நிலைமையை ஆராய்தல்
அதீத இயற்கைச்சீற்றங்களால் ஜப்பானில் 40 வயது ஃபுகுஷிமா அணு உலையில் நடந்த ஒரு விபத்து, பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு ஆவதற்கான நம் கனவுகளை தடம் புரளச் செய்வதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? சில ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, அணுசக்தியை படிப்படியாக நிறுத்த‌ முடிவு செய்திருப்பது நமது அணுசக்தித் திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை நம்மை எடுக்க வைக்கும் மேலோட்டமான‌ விவாதப்பொருளாகிவிடக்கூடாது.
தொடர்புடைய சில விஷயங்களை இங்கே சொல்ல வேண்டும். ஜெர்மனியின் முடிவு அதன் தற்போதைய நிலைமைக்குப் பொருந்துகிறது – அணுசக்தி தொடர்பாக முன்வைக்கப்படும் அபாயங்களின் வெற்று கரிசனங்களைத் தாண்டியது அது. ஜெர்மனி ஒரு முன்னேறிய நாடு, மின்சக்தி உபரியாக வைத்திருக்கும் நாடு. அதனால் சில அணு உலைகளை இழப்பதில் அதற்குப் பிரச்னையில்லை. அதை விட முக்கியமாக, ஜெர்மனி தன் அணு க்கனிம வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி முடித்து விட்டது. யுரேனியம் மொத்தத் தேவை 3,332 டன்களில் (2006 – 2008) (vii) எனும் போது அதனால் உற்பத்தி செய்ய‌ முடிந்தது 68 டன்கள் மட்டுமே (குறிப்பு : இது 2006ம் ஆண்டின் உற்பத்தி). பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருக்கிற‌து (viii). ஆக, ஆற்றல் சுதந்தரம் என்ற அதன் குறிக்கோளுக்கு அணு ஆற்றல் பொருந்தாது. இதற்கு நேர்மாறாக இந்தியா தோரியம் எனப்படும் புதிய அணு எரிபொருள் வளத்தில் முதன்மையில் இருக்கிறது – இது நாளைய‌ அணு எரிபொருளாகக் கருதப்படுகிறது.
சில மேற்கத்திய நாடுகள் தம் அணுத்திட்டங்களை நிறுத்துவதாக‌ அல்லது ஜப்பான் தன் அணு உலை விஸ்தரிப்பை மறுபரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படும் போது இந்திய மக்கள் தவறாக செலுத்தப்படுகிறார்கள். தொடர்புடைய அட்டவணையைக் கவனியுங்கள். முன்னேறிய நாடுகள் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் பங்கு என்ன என்பதைக் காட்டுகிறது இது.
பெரும்பாலான செல்வச்செழிப்பு மிக்க‌ நாடுகள் 30 – 40 சதவிகித மின்சாரத்தை அணுசக்தியிலிருந்து பெறுகின்றன என்பதையும் பருவநிலை மாற்றங்கள் பாதிப்புக்குள்ளாதல், சூழல் மாசு ஏற்படுத்தும் சுகாதாரக் கேடுகள் ஆகிய சுமையைக் குறைத்து, சுத்த‌ சக்தி திட்டத்தில் அது குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கிறது என்பதையும் இந்த ஆய்வு தெளிவாக்குகிறது. அதே சமயம் இந்தியா தன் மொத்த 150 ஜிகாவாட் மின் உற்பத்தியில் 5000 மெகாவாட் கூட அணுசக்தி மூலம் உற்பத்தி செய்வதில்லை. பெரும்பாலானது நிலக்கரியிலிருந்தே வருகிறது.
அணுசக்தியின் அதிகபட்ச பலன்களை அனுபவித்து வரும் நாடுகள் அவ்வப்போது பரப்பும் அணுசக்திக்கு எதிரான செய்திகளில் அடித்துச் செல்லப்படாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தம் வெற்றிகளைத் திரித்து, நியோ யுக செயலுரிமை அதிகார பொருளாதாரக் கட்டுப்படுத்தலுக்கு சவாலாக அமையக்கூடிய இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளை தவறாக வழி நடத்துவது பொருளாதாரத்தில் முன்னேறிய உலகுக்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பழக்கம். இந்தியாவுக்கு என்ன தேவை என்பதை இந்தியர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆக, நமது சூழ்நிலை மற்றும் கனிம வளம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நம் பொருளாதார வளத்திற்குத் தேவைப்படும் சிறந்த செயல் எது என நாம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அபூர்வமான, மிக முக்கியமான, நாளைய‌ அணு எரிபொருளான தோரிய வளம் அருளப் பெற்றது இந்தியா. உலகின் ஆற்றல் தலைந‌கராக உருவாகக்கூடிய வாய்ப்பை நாம் இழக்க முடியாது. அத்தோடு மாபெரும் இளைஞர் சக்தியும் இணைந்தால் பெரும் பொருளாதார சக்தியாக உருவெடுப்பதற்கு அதுவே காரணமாக‌ அமையும். தொல்லுயிரெச்ச எரிபொருளைச் சார்ந்திராத முதல் நாடு என்ற கனவை நனவாக்கும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறது. இதனால் பெட்ரோலியமும் நிலக்கரியும் இறக்குமதி செய்வதற்கான‌ 10,000 கோடி டாலர் செலவிலிருந்தும் நாடு விடுவிக்கப்படும். நிலக்கரிக்கோ எண்ணெய்க்கோ செலவழியும் பல நூறுகோடி டாலர்கள் தவிர சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் பல லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களையும் நாம் இதன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 2010 – 11ல் 8200 கோடி டன்கள் நிலக்கரி (xii) இறக்குமதி செய்திருக்கிறோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதில் கணிசமான பங்கு அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் 2ல் (xiii) காட்டப்பட்டுள்ளதைப் போல் வருங்காலத்தில் இது பன்மடங்கு அதிகரிக்கும் என்பது வல்லுனர்களின் நம்பிக்கை.
நிலக்கரி வயல்களும் எரியும் பூமியும்
ஜார்கண்டிலிருக்கும் ஜாரியா, நிலக்கரி வயல் நாட்டின் மிக வளமான நிலக்கரிப் பிரதேசமாகத் திகழ்கிறது. அங்கு அதிக‌ அளவில் உயர் ரக சுட்ட நிலக்கரி இருக்கிறது. ஆனால் உள்ளூர் பழங்குடி கிராமத்தவர்களுக்கு இந்த இயற்கை வளம் அங்கே இருப்பது ஒரு சாபம். பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் விளைவித்த விபத்துகளின் நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட ஜாரியா பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சுரங்கத் தீ விபத்துக்கள் இன்னமும் தொடர்கின்றன‌.
நான் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் சிந்திரியிலிருந்து தன்பாத் சென்று கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்கான கிராம மக்கள் என் காரை நோக்கி விரைந்து வந்தார்கள். நாங்கள் உடனே நிறுத்தி அவர்களை விசாரித்தோம். அவர்கள் வீடுகளுக்கு அருகில் தீப்பிடித்தல், அதிகச் சூடாகுதல் போன்ற நிகழ்வுகள் வழக்கமாகிவிட்டதை விவரித்தார்கள். சுரங்கத்துறையினருக்கு இருக்கும் பெரும் சவால் மக்கள் தொகையும் மக்கள் அடர்த்தியும் மிகுந்த நிலக்கரிப் பிரதேசங்களில் தீ விபத்துக்களைக் கையாள்வதுதான். நானும் என் குழுவும் அவர்கள் வீடுகளைச் சென்று பார்த்தோம். அங்கே வானத்திலிருந்து அல்லாமல் கீழே நிலத்திலிருந்து அதிகபட்சமான, தாங்கவொண்ணா வெப்பம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. சிலசமயம் நெருப்பு ஜ்வாலைகள் நிலத்திலிருந்து வெளிப்பட்டு பூமியைக் கருப்பாக்கும்.
மொத்தப் பகுதியே சுரங்க வேலைகளால் அழிக்கப்பட்டு, மனிதர்களோ பிற உயிர்களோ வாழத் தகுதியற்றதாக ஆக்கப்பட்டிருந்தது. துக்ககரமாக, அதைப் பழைய நிலைமைக்கு மாற்றவே முடியாது. குறைந்தபட்சம் அடுத்து சில லட்சம் வருடங்களுக்கேனும். இன்று உலகம் முழுக்க எடுக்கப்படும் நில‌க்கரியில் பெரும்பான்மை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பூமியெங்கும் கிராமங்களிலும் காடுகளிலும் பல ஜாரியாக்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் தொல்லுயிரெச்ச எரிபொருட்களுக்கு நீடித்ததொரு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கும்வரை இவை எண்ணிக்கையிலும் அளவினிலும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும்.
இயற்கைக்கு உகந்த ஆற்றல் வழிகள் நிச்சயம் சூரிய சக்தியும் காற்றாலைகளும்தாம். ஏராள‌ சூரிய ஒளி, காற்று வேகம் அதிகமாக இருக்கும் இட‌ங்கள் என இந்த வகை ஆற்றலுக்கான வாய்ப்பு நிச்சயம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் சூரிய சக்தியும் காற்றாலைகளும் அவற்றின் அத்தனை அனுகூலங்களையும் தாண்டி வானிலையையும் சூரிய ஒளியையும் ஆதீதமாகச் சார்ந்து இருப்பதால் நிலையற்றவை. இதற்கு நேர்மாறாக அணு சக்தி சர்வதேசிய இருப்புடன், ஒப்பீட்டளவில் சுத்தமான, அதிக அடர்த்தியான, நம்பகத்தன்மையான ஆற்றல் மூலமாக விளங்குகிறது. இன்று 29 நாடுகள் 441 அணு உலைகளை இயக்கி 495 ஜிகாவாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. மொத்தமாக இத்துறையில் 14,000 வருட உலை அனுபவம் இருக்கிறது. 58.6 ஜிகாவாட் உற்பத்தித் திறனில் அறுபது புதிய அணு உலைகள் கட்டுமான‌த்தில் இருக்கின்றன (குறிப்பு: 2010ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில்).
அணு உலை விபத்துகளின் அழிவு சக்தி, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கத் துருப்புகள் ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுகளின் விளைவுகளோடு ஒப்பிட‌ப்படுகிறது. அணு அபாயங்கள், விபரீதங்கள் குறித்த நமது கருத்துகளைக் கட்டமைக்க நகரங்கள் மீது பரவிய வெண்குடை மேகங்கள், தீய்ந்து போன கட்டடங்கள் போன்ற கொடுமையான‌ மரணக் காட்சிகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் இது உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அணுகுண்டை அணு உலையோடு ஒப்பிடுவது மோசமான முடிவு. திட்டமிட்டு பீதியைப் பரப்பும் செயல். அணுகுண்டு என்பது குறைந்த நேரத்தில் அதிக ஆற்றலை வெளியிடுவதன் மூலம் வெடிப்புகளும், நெருப்பும் உருவாகி, பிரம்மாண்ட வெப்பம் உற்பத்தி ஆகிறது. அதன் வழியில் எதிர்ப்படும் எல்லாப் பொருட்களையும் உருத்தெரியாமல் சிதைப்பதற்கென்றே அது வடிவமைக்கப்பட்டது. ஒரு குண்டு இப்படிச் செய்யவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்படும்.
இதற்கு நேர்மாறாக, அணு உலைகள் போன்ற ராணுவம் சாரா அணு பயன்பாடுகள், குறைந்த ஆற்றலை பெரும் காலச்சட்டகத்தில் நிலைத்து நின்று வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டவை. அணுக்கரு விளைவுகளைக் கட்டுப்படுத்தும், குளிரச்செய்யும் அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டவை . பாதுகாப்பு முறைமைகள், காப்பு ஏற்பாடுகள் ஆகியவை இருக்கின்றன. 2011 போலான ஒரு விபரீதத்தின் போதும் கூட‌ ஏற்படும் அழிவு அணுகுண்டால் ஏற்படுவதில் ஒரு பின்னம் கூட இருக்காது.