வியாழன், 17 நவம்பர், 2011

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 3


எதிர்காலத்தின் அணு எரிபொருள் : தோரியம்
கதிரியக்கப் பொருள்களில் குறைவாக அறியப்பட்ட ஓர் உறுப்பினரை நாம் அறிமுகம் செய்து கொள்வோம் – தோரியம். ஒருவேளை எதிர்காலத்தில் சாத்தியமான சிறந்த தீர்வாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு சிறந்த தேர்வாகவும் அது அமையும். தனிம அட்டவணையில் 90வது தனிமமான தோரியம் யுரேனியத்தைவிட சற்றே எடை குறைந்தது. தோரியம் ஏராளமாகக் கிடைக்கிறது – பாரம்பரிய அணு எரிபொருளான யுரேனியத்தைவிட நான்கு மடங்கு (xxvi) அதிகமாக.
தவிர, அதன் தூய்மையான வடிவத்தில் கிடைக்கிறது. மிஞ்சியிருக்கும் பெட்ரோலியம், நிலக்கரி, பிற தொல்லுயிரெச்ச எரிபொருட்கள் மற்றும் யுரேனியம் எல்லாவற்றையும் சேர்த்தால் கிடைக்கும் ஒட்டுமொத்த ஆற்றலை விட தோரிய இருப்பில் கிடைக்கும் மொத்த ஆற்றல் அதிகம் என நம்பப்படுகிறது.  உலகின் மிகப்பெரிய தோரிய இருப்பு – 6,50,000 டன்கள் – இந்தியாவில் இருக்கலாம் என IAEA அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (IAEA என்பது ச‌ர்வதேச அணு சக்தி முகமை. அணுசக்தித் துறையில் உலகின் ஒத்துழைப்பு மையம். இது 1957ல் ‘அமைதிக்காக அணுக்கள்’ என்ற அமைப்பாக ஐ.நா. குடும்ப அங்கமாகத் தொடங்கப்பட்டது).
மொத்த தோரிய இருப்பில் இது நான்கில் ஒரு பங்கை விட அதிகம். ஒப்பீட்டளவில் யுரேனிய மொத்த இருப்பில் 1 சதவிகிதத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. இது மூடிய எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பம் மூலம் திறம்படப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தோரியத்தால் வேறு பல நன்மைகளும் இருக்கின்றன. (இயற்கை) யுரேனியத்துடன்(xxvii) ஒப்பிடும்போது தோரியத்தால் (அதிலிருந்து தயாரிக்கப்படும் யுரேனியம்-233ன் வழியாக) ஒரு நிறை அலகுக்கு எட்டு மடங்கு அதிக மின்சாரம் தயாரிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிக அதிகம் விவாதிக்கப்படும் கழிவு வெளியேற்றத்திலும் தோரியத்தில் ஒப்பீட்டளவில் நன்மை அதிகம். தோரியம் வெளியேற்றும் கழிவுகளில் ஆக்டினைடுகள் (யுரேனியத்துடன் தொடர்புடையவை) இல்லாததால் ஒப்பீட்டளவில் இவை குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை.
அதே நேரம், யுரேனியத்திலிருந்து வரும் நீண்ட ஆயுளுடைய உயர் மட்டக் கழிவுகளை – குறிப்பாக ப்ளுடோனிய மற்றும் யுரேனிய மீட்புக்காக மறுபதனிடுதல் உள்ளிட்ட மூடிய எரிபொருள் சுழற்சியைப் பின்பற்றும் இந்திய வழிமுறைகளின் பின்புலத்தில் – இன்று கிடைக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டு சிறப்பாகக் கையாள‌ முடியும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான அந்தக் கழிவுகளைக் (1000 மெகாவாட் உலையிலிருந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள கழிவுகளுக்கு ஒரு கால்பந்து மைதானத்தில் கால் பங்கு அளவுள்ள ஒரு நீண்ட கால சேமிப்பு இடம் போதுமானது) கண்ணாடியாக்கி சுற்றுச்சூழலுக்கோ, மக்களுக்கோ எந்த ஆபத்தும் விளைவிக்காமல் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் என்று இந்திய அணு வல்லுனர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்.
திடீரென முளைக்கும் ஒரு கேள்வி – பிறகு, ஏன் தோரியத்தைக் காட்டிலும் யுரேனியமே உலகம் முழுக்க அணு ஆற்றல் திட்டங்களுக்கான‌ பிரபலத் தேர்வாக ஆனது? இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தொழில்நுட்ப ரீதியானது. மற்றது வரலாற்று ரீதியானது.
தொழில்நுட்பரீதியான காரணம் ஓர் எளிய உண்மையிலிருந்து கிளைக்கிறது. முதலில் ஒருவர் தோரியத்திலிருந்து யுரேனியம்-233ஐத் தயாரிக்க வேண்டும். இதற்கு இயற்கையில் கிடைக்கும் அணு எரிபொருளான யுரேனியம்-235 சார்ந்த உலைகள் தேவை. கூடுதலாக, கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்ப‌ட்ட தோரியத்தை பெரிய அளவில் மறுபதனிடுவதன் மூலம் யுரேனியம்-233ஐ மீட்பதும், கடின காமா கதிர்களை உமிழும் யுரேனியம்-232 இதில் இருக்க வாய்ப்பிருப்பதும் சில நடைமுறைச் சிக்கல்களை முன்வைக்கின்றன. ஆனால் வல்லுனர்களின் கருத்துப்படி இந்த எல்லாவற்றையுமே தொழில்நுட்பரீதியாக சமாளித்து விடலாம்.
தோரியம் சார்ந்த எரிபொருள் வழங்கும் பலமிருந்தும் முன்னேற்ற‌த்தின் ஏணியில் ஏன் தோரியம் பின் தங்கியது என்பதற்கான இரண்டாவதும் வரலாற்று ரீதியானதுமான காரணம், ஒப்பீட்டளவில் நிலையற்ற புவியியல் சார் அரசியல் நிலைமைகளின் சூழலைக் கொண்டு பார்த்தால் – தோரியத்தை ஆயுதமாக்க இயலாது. மின்சார மூலமாக இருப்பதும், அழிவுப் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப் படுவதும் என இரண்டுக்குமிடையே எப்போதும் கயிற்றின் மேல் நடப்பது போல் இருக்கும் யுரேனியம் போல் அல்லாது தோரியம் குண்டுகளை அப்படித் தயாரித்து விட முடியாது.
இங்குதான் வரலாறு உள்ளே வருகிறது. தற்போதைய ராணுவம் சாராத அணுப் பயன்பாடுகளில் கணிசமானவை பனிப்போர் காலத்து ராணுவ அணு தொழில்நுட்பங்களிலிருந்து நேரடியாகக் கிளைத்தவை என்பது நினைவு கூர வேண்டும். அணு தொழில்நுட்பத்தின் முதல் குறிப்பிடத்தக்க‌ வெளியீடு இரண்டாம் உலகப் போரின் போதான மான்ஹாட்டன் திட்டம். அது தான் இறுதியில் அமெரிக்காவின் 1945 ஹிரோஷிமா நாகாசாகி குண்டுவெடிப்பில் முடிந்தது.
அணு ஆயுதம் என்பது அணு உலையிலிருந்து வேறுபட்டது. முதலாவதில் அணு வினைகளை மட்டுப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ வேண்டிய அவசியமில்லை, அதனால் பேரழிவை விளைவிக்கும் ஆற்றல், குறுகிய கால இடைவெளியில் வெளிப்படும். அது தான் அணுகுண்டின் சாரமே. ஆனால் அணு உலையில் நீடித்து நிலைக்கும் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் வெளிப்படும்படியாக‌ மட்டறுத்தல் தேவைப்படுகிறது. 1951 தான் குறிப்பிட்டுச் சொல்லும் படியான கட்டுப்படுத்தப்பட்ட அணு மின்சார உற்பத்தி இடாகோவில் EBR-1 பரிசோதனை மூலம் 100 கிலோவாட் சக்தி தரும்படியாகச் செய்யப்பட்டது. அணுத் தொழில்நுட்பத்தில் இந்த “ஆயுதமே பிரதானம்” என்ற அணுகுமுறை தான் ஆயுதமாக்கவியலா தோரியத்தின் மேல் குறைந்த கவனத்தையும் ஆயுதமாக்கவியலும் யுரேனியத்தின் பால் மிகுந்த கவனத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது தோரியத்தின் பெரும் சொந்தக்காரனாகவும், வளர்ச்சிக்கு உகந்த பெரும் மின்சாரத்தேவை உடைய நாடுகளில் ஒன்றாகவும் நடப்பு அணுத் திட்டங்களைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்க இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பு. குறிப்பாக, நீண்ட கால நிலையான‌ தேர்வாக இருக்கும் தோரியத்தின் வழியில் சிறப்பு கவனத்துடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் இது ஏற்கெனவே நடந்து கொண்டும் இருக்கிறது. இந்தத் தேவைக்காக, இந்தியாவின் தற்போதைய திட்டத்தை – யுரேனியம் மற்றும் ப்ளுடோனியம் சார்ந்த எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பங்களும், இவை தோரியம் சார் உலைகளாக மாற்றமடையும் போது பெருமளவு தோரியத்தைக் கதிர்வீச்சுக்குட்படுத்தி யுரேனியம்-233 எரிபொருளை ஆக்குவதும் – தொடர்வது முக்கியமாகிறது.
இந்தியாவின் திட்டமான நவீன கன நீர் உலை (AHWR) உருவாக்குதல் இந்தியாவில் தோரியப் பயன்பாட்டின் ஆரம்ப நிலையில் ஒரு முக்கியப்படி என்பது குறிப்பிடத்தக்கது. தோரியத்தைப் பயன்படுத்தும் குறிப்பிடும்படியான அடுத்தகட்ட‌ முயற்சிகளுள் தோரியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட யுரேனியம்-233லிருந்து நிலையான‌ ஆற்றல் உற்பத்தி செய்யத் தேவைப்படும் வெப்ப மற்றும் வேக உலைகளும் அடங்கும்.
நம்பிக்கையூட்டும் எதிர்காலம் மிக்க ‌தோரியம் சார் உலைகளுக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு சோதனை அடிப்படையில் இந்தியா உட்பட உலகெங்கும் முயற்சிக்கப்ப‌ட்டு வருகிறது. முதலில் அதை வழக்கமான‌ உலைகளைக் கொண்டு அணுப்பிளவுறும் யுரேனியம்-233 ஓரகத்தனிமமாக உருவாக்குதல் அல்லது உருகிய உப்பு உலைகள் (MSR) போன்ற தொழில்நுட்பங்களின் மூலம் காற்றுடன் வினை புரியாமல், காற்றிலோ, நீரிலோ எரியாமல் உப்புகளைப் பயன்படுத்தி அணுப்பிளவுறும் பொருட்களை சேகரித்தல் ஆகியவை இதில் அடங்கும். இத்தொழில்நுட்ப‌த்தில் செயல்பாட்டு அழுத்தம் சாதாரண காற்றழுத்தத்துக்கு அருகில் இருக்கும். இதனால் கட்டுமானச் செலவும் குறைவு, அழுத்தத்தின் காரணமாக வெடிக்கும் அபாயமும் இல்லை(xviii).
அணு ஆற்றல் திட்டங்களின் தாய்த்திட்டமான அணு ஆயுதங்களின் வடிவில் குறிப்பிடத்தக்க அதிக அளவிலான உயர் திறனுடைய அணு பொருள்கள் இருக்கவே செய்கின்றன, அவற்றின் இருப்பு தொடர‌வே செய்யும். 2010ல் உலகின் ஒன்பது நாடுகளில் 22,000 அணு ஆயுதங்கள் இருந்தன. அவற்றில் 8,000 ஆயுதங்கள்(xxix) கட்டுப்படுத்தப்பட்ட அணு உலைகளைக் காட்டிலும் அதிக ஆபத்தைச் சுமந்த‌படி வெடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. அமைதியான மின்சாரத் தயாரிப்புத் திட்டத்தை நிறுத்துவதற்கு ஆபத்து என்ற வாதத்தைப் பயன்படுத்தினால், அணு எதிர்ப்புக் குழுக்கள் முதலில் அவர்களின் முயற்சியை – அழிவையே நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உலகின் 90 சதவிகித அணு ஆயுதங்களை வைத்திருக்கும் – வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் திருப்ப வேண்டும். அது நடக்குமா? கண்ணுக்கெட்டிய எதிர்காலத்தில் தெரியவில்லை. நமது நோக்கம் அணு சக்தியுடன் தொடர்புடைய ஆபத்துக்களைக் குறைப்பதே.
அணுக்கருவின் சக்தி மிகப்பெரியது. மனிதகுலத்தின் எதிர்காலம் அதை பாதுகாப்பாகவும் திறம்படவும் பயன்படுத்துவதில்தான் இருக்கிற‌து. வரும் ஆண்டுகளில் பூமி சார்ந்த தேவைகளுக்கு மட்டுமில்லாமல் நமது விண்வெளி திட்டங்களுக்கும் மற்ற கோள்களில் நமது நாகரிகம் குடியேறுவதற்கும் கூட அது தான் நமக்கு எரிபொருள். நமது தற்போதைய அணுத் திட்டங்கள் தோரியம் போன்ற மேம்பட்ட, பாதுகாப்பான பொருட்களுக்கு விரிவடையும். பிற்பாடு அணுக்கருப்பிணைவு போன்ற மேம்பட்ட அணு வினைகளுக்கு மாறும். இவை முழுமையாக உருவாக்கப்படும் போது தற்போதைய அணுச்சிதைவு முறைகளைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அணு மூலங்கள் தரும் சிக்கனமான, சுத்தமான, நிறைந்த மின்சாரம் தான் ஆரோக்கியமான, கற்றறிந்த‌, இணைக்கப்பட்ட ஓர் எதிர்காலத்துக்கான நமது நுழைவாயில் – விண்வெளியில் ஆழமாகச் செல்லும், தற்போதைய மனித கற்பனைகளின் எல்லைகளைத் தாண்டும் ஓர் எதிர்காலம்.
*
ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை இருந்தவர். அவரது மின்னஞ்சல் apj@abdulkalam.com
ஸ்ரீஜன் பால் சிங், Sustainable Development துறையில் வல்லுனர், மின் பொறியாளர், ஐஐஎம்ஏவில் எம்பிஏ பயின்றவர். அவரது மின்னஞ்சல் 7srijanpal@iimahd.ernet.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக