வியாழன், 17 நவம்பர், 2011

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 2


அணு அபாயங்கள்
ஃபுகுஷிமா – டாய்ச்சி நிகழ்வுகளை நாம் அணு உலை விபத்துக்களின் வரலாற்றுச் சட்டகத்துள் வைத்து ஆராயவேண்டும். பெருமளவில் பொருட்சேதமும், அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பும் இருந்தாலும் விபத்தின்போதோ அதற்குப் பிறகான மீட்பு நடவடிக்கைகளின்போதோ நேரடியான உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கெட்டதிலும் ஓர் ஆறுதலான விஷயம், 1986 செர்னோபில் விபத்துடன் ஒப்பிடும்போது இந்த விபத்து கையாளப்பட்ட விதம், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அணு உலை அவசரநிலைகளின் போதான மேலாண்மையில் நாம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டியது. ஃபுகுஷிமா – டாய்ச்சி உலை, மின் உற்பத்தியில் கிட்டதட்ட ஐந்து மடங்கு பெரியது.
அதைவிட முக்கியமாக, விபத்தின்போது ஒன்பது மடங்கு அதிக அணு எரிபொருளைக் கொண்டிருந்தது. ஆனாலும், இடைப்பட்ட‌ வருடங்களில் அவசரநிலை மேலாண்மையில் நாம் கற்றுக் கொண்டதை வைத்து உச்சபட்சக் கதிர்வீச்சை செர்னோபில் விபத்தில் வெளியானதில் 0.4 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கட்டுப்படுத்த முடிந்தது. ஃபுகுஷிமா – டாய்ச்சி விபத்து துரதிர்ஷ்டவசமானது, ஆய்வுக்குட்பட்டது என்றாலும் அணு உலை அவசரநிலைகளைக் கையாள்வதில் தேசிய மற்றும் சர்வதேசிய வல்லமைகளை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அணுசக்தி விவாதங்களின்போது வைக்கப்படும் மற்றொரு வாதம், அணு விபத்துக்களின்போதும் அதற்குப் பிறகும் வெளிப்படும் கதிர்வீச்சினால் அந்தத் தலைமுறை மட்டுமல்ல, அடுத்து வரும் தலைமுறைகளும் பாதிக்கப்படும் என்பது. வெறும் ஊகங்கள், படக்கதைப் புத்தகக்‌ கற்பனைகளை விட கிடைத்திருக்கும் தகவல்களுக்கும், விஞ்ஞான விசாரணைகளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் தருவோமெனில், இந்த வாதம் எந்த வகையில் பார்த்தாலும் ஒரு புரட்டு என்பது நிரூபணமாகும்.
மனிதர்கள் கதிர்வீச்சுக்கு இலக்கானதற்கும், அழிவுக்கு உள்ளானதற்கும் வலுவான உதாரண‌ங்கள் என்றால் வாதத்துக்கு இடமின்றி 1945ன் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி அணுகுண்டு வீச்சுகள் தாம். இந்த இரண்டு சந்தர்ப்பங்களில்தான் அணுசக்தி வேண்டுமென்றே மனித அழிவுக்கெனத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. குண்டுவெடிப்புக்குப் பின், அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்கள் மத்தியில், க‌திர்வீச்சு தாமதமாக ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய 1946ல் அமெரிக்க அரசாங்கம் அணுகுண்டுவீச்சு பாதிப்பு கமிஷனை (ABCC) அமைத்தது. 30 வருடங்கள் அது இயங்கியது. பின் 1974ல், அமெரிக்க ஜப்பானியக்‌ கூட்டு முயற்சியாக, கதிர்வீச்சு விளைவுகள் ஆராய்ச்சி நிறுவனம் (RERF) என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டு, இன்றும் செயல்பட்டு வருகிறது.
ABCC மற்றும் RERF கடந்த அறுபது ஆண்டுகளாக பல தலைமுறைகளுக்கு மத்தியில், அணு விபரீதங்கள் மற்றும் கதிர்வீச்சின் நீண்டகால‌ விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து வெளியிட்ட கண்டுபிடிப்பு முடிவுகள் கதிர்வீச்சின் பாதிப்பு சாத்தியங்கள் மீது ஒளி பாய்ச்சி இருக்கின்றன.  நீண்ட கால (நிலையான‌) 100 மில்லிசீவர்ட்ஸ் (mSv – கதிர்வீச்சை அளப்பதற்கான சர்வதேச அலகு) அளவு கதிர்வீச்சுக்கு ஆளானால் புற்றுநோய் அபாயம் 0.5%- லிருந்து 0.7 % ஆக அதிகரிக்கும் என்கிறது அதன் ஆய்வறிக்கை. ஃபுகுஷிமாவைச் சுற்றிய நெருங்கிய வட்டாரங்களில் உச்சபட்ச கதிர்வீச்சு 800மில்லிசீவர்ட்ஸ்(xiv) என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர்வீச்சுக்கு ஆளாவதற்கும், புற்றுநோய் வருவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் – பரவலான நம்பிக்கைக்கு எதிராக – கதிர்வீச்சின் பாதிப்பு என்பது அதன் பாதிப்புக்குள்ளான தலைமுறைக்கானது மட்டுமே என கண்டுபிடிப்புகள் தெளிவாகச் சொல்கின்றன. ஆய்வறிக்கையிலிருந்து, ’இதுவரையிலான எங்கள் ஆராய்ச்சியில், கதிர்வீச்சுக்கு ஆளான‌ பெற்றோரிலிருந்து எந்த மரப‌ணு விளைவுகளையும் A-Bombல் பிழைத்தவர்களின் குழந்தைகளிடம் கண்டுபிடிக்கவில்லை.”(xv) (A-Bomb என்பது அணுகுண்டைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945ல் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி மீது இரு அணுகுண்டுகள் அமெரிக்காவால் போடப்பட்டன). அணுவிபத்துக்களின் போதான கதிர்வீச்சு ஆபத்தானது தான். ஆனால், அணுவிபத்துக்கள் வரும் தலைமுறைகளையும் பாதிக்கும் என்பது தவறான பிரச்சாரம். அதே சமயம், கடந்த தசாப்தங்களில் தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது, அணு விபத்துக்களைத் தடுக்கும் மனிதர்களின் வல்லமையும் நிச்சயம் மேம்பட்டு இருக்கிறது.
ஆற்றல் அடர்த்தி, மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தின் மீதான விளைவு, பொருளாதார பலன்கள் ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சிறந்தது அணுச‌க்திதான் என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது, இத்துறை தொடர்புடைய முக்கிய சவால்களைப் பார்க்கலாம். குறிப்பாக, சமீபத்தில் இயற்கைச்சீற்ற விபத்துக்குள்ளான ஃபுகுஷிமாவில் உள்ள‌ டாய்ச்சி அணு உலை எழுப்பியிருப்பவை. இரண்டு பிரச்னைகள் இங்கு முக்கியமானவை. முதலாவது, விபத்தின் போதான உலையின் பாதுகாப்பு. இரண்டாவது, உலை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அணுக்கழிவுகள் தொடர்புடையது.
இரண்டாவது பிரச்னையை முதலில் பார்ப்போம்.
அணு ஆற்றலின் பிற வாய்ப்புச் செலவு
அ) அணுசக்தியைத் தவிர்ப்பது என்பது தர்க்கரீதியான மாற்றை முன்வைக்காத‌ ஓர் அரைகுறை எதிர்வினை. மாற்று நடவடிக்கைகளுக்கான முழுமையான சித்திரத்தைப் பார்த்தோமென்றால் தற்போதைய மற்றும் எதிர்கால ஆற்றல் தேவைகளை அடைவதை நாம் ஆதரிக்கத்தான்வேண்டும்.
பொருளாதாரத்தில் “பிறவாய்ப்புச் செலவு” என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. அடுத்த மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கும் போது ஆகும் செலவு. ஒட்டுமொத்த அணு ஆற்றல் தயாரிப்புக்கும் நாம் தடை விதித்தால் என்ன ஆகும்? எதிர்காலத்தேவையில் கொஞ்சம் பகுதி – அது சிற்றிலக்கமாக இருந்த போதிலும் – சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலங்களிலிருந்து வரும். முன்பே குறிப்பிட்டது போல், பெரும் நிச்சமற்ற தன்மையுடன். நீர் மின்சாரமும் குறையும் ஒரு பகுதியை நிரப்பும். ஆனால், எல்லா சாத்தியங்களையும் வைத்துப் பார்த்தால், குறைந்தபட்சம் சமீப‌ மற்றும் மத்திம எதிர்காலத்தில் – தொல்லுயிரெச்ச எரிபொருள் சார்ந்த மின்சார தயாரிப்பு முறைகளை நாம் சார்ந்திருக்கும் நிலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். ஆனால் அங்கே தான் பிரச்னையே இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் மனித இனத்தின் செயல்பாடுகளால் 3000 கோடி டன்கள்(xvi) கொண்ட கரியமில‌ வாயு காற்று மண்டலத்தில் கலக்கிறது. அதில் 26 சதவிகித வெளியீடு (760 கோடி டன்கள்) மின் உற்பத்தி தேவைகளின் நேரடி விளைவுகளினால் ஏற்பட்டவை என IPCC மதிப்ப்பிட்டிருக்கிறது. இதனால் காற்று மாசடைதல் மட்டுமல்ல, மழை வரத்து, கடல் மட்டம், வெப்பநிலை ஆகிய‌வற்றை பாதிக்கும் வானிலை மாற்றங்களையும் தூண்டும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, நோய்வாய்ப்படுதல் மாற்றங்கள் ஆகியன நிகழும். நகர்ப்புற,‌ வெளிப்புற‌ காற்று மாசு படுதலால் மட்டும் 13 லட்சம் பேரும் (xvii), வானிலை மாற்றங்களுக்கு ஒத்துப்போக இயலாமல் 1,40,000 பேரும் உயிரிழப்பதாக(xviii) உலக சுகாதார மையம் மதிப்பிட்டிருக்கிற‌து. (இது தவிர, 20 லட்சம் பேர் உள்ளக‌ மாசுபடுதலால் உயிரிழக்கின்றார்கள். இவர்களில் கணிசமானோர் பெண்களும், ஐந்து வயதுகுட்பட்ட குழந்தைகளும்).
மின் தயாரிப்பு செயல்பாடுகளின் காரணமான‌ மாசுபடுதல் மற்றும் தொடர்புடைய வானிலை மாற்ற‌ங்கள் நேரடியாகவோ, மறைமாகவோ 4,81,000 மரணங்களை ஒவ்வோர் ஆண்டும் ஏற்படுத்துகின்றன. ஒப்பீட்டளவில் செர்னோபிலில் நடந்தது, மிக மோசமான ராணுவம் சாராத அணு விபத்து. 4000 பேர் வரையிலான‌ புற்றுநோய்(xix) (கணிசமானவை குணப்படுத்தக்கூடியவை) பாதிப்புகளையும், 57 நேரடி பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் கதிர்வீச்சு விளைவுகள் விஞ்ஞான கமிட்டி (UNSCEAR) கணக்கிட்டிருக்கிறது. அசுத்த தொல்லுயிரெச்ச ஆற்றல் எதிர்காலத்தில் நிலைக்காது. அதைத்தவிர தொல்லுயிரெச்ச எரிபொருள் வேகமாகத் தீர்ந்து வருகிறது. அதன் பற்றாக்குறை புவியியல் சார் அரசியல் நிலையாமைகளை உலகெங்கும் உருவாக்கி வருகிறது.
மாசுபாடு, வெளிப்புறம் மற்றும் உள்ளகம்
நகர்ப்புற வெளிப்புற மாசுபாடு (UOP): இது நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பொதுவாக, திறந்த வெளிகளில் – உதாரணம்: சாலைகள் – வாழும் மக்கள் அனுபவிக்கும் காற்று மாசுபாட்டைக் குறிக்கிறது. உள்ளகக் காற்று மாசுபாடு (IAP) பொதுவாக, திறமில்லாத எரிபொருள் நுகர்வு, ரசாயன மாசுபாட்டுக்குள்ளாகும் கட்டடப் பொருள், மற்றும் இன்ன பிற காரணங்களால் உட்புறத்தில் காணப்படும் மாசுபடுத்தும் விஷயங்களைக் குறிக்கிறது. IAPக்கு UOPயும் பங்களிக்கிறது. கிட்டதட்ட இருபது லட்சம் பேர் உள்ளகக் காற்று மாசுபாட்டின் காரணமாக உயிரிழக்கிறார்கள். இதில் மிக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும்.
இது தவிர, மாறி வரும் வானிலை எதிர்காலத்தில் பெரும் ஏற்பு விலைப் பட்டையோடு வரும் என நம்பப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் பெரும் தொகையான 30,000 கோடி டாலர்கள். இது உலக GDPக்கு(xx) பெருத்த இழப்பாக இருக்கும். நாம் டைப்-0 வகை எரிபொருள்களிலிருந்து வெளியேறி அடுத்த தலைமுறை எரிபொருள்களுக்கு – இவற்றில் மிக முக்கியமானது அணு எரிபொருள், இது நம் எதிர்கால விண்வெளித் திட்டங்களூக்கும் பக்கபலமாக இருக்கும் – மாறினால் தான் அத்தனை பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். 1000 மெகாவாட் நிலக்கரி மின் நிலையத்துக்கும், அணு உலைக்குமான தோராய தர ஒப்பீடு அட்டவணை-1ல் தரப்பட்டுள்ளது.
அணுசக்தியின் பாதுகாப்பு பிரச்னைகள்
 ஆ) இப்போது, நாம் மற்ற பிரச்னையான உலை பாதுகாப்பை ஆழமாகப் பார்ப்போம். அணு மின்சார உற்பத்தியின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் நான்கு பெரிய உலை விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1957ல் எரிபொருள் மறுபதனிடுதலில் நடந்த‌ கைஷ்டைம் விபத்து, ஒப்பீட்டளவில் சிறிய மூன்று மைல் தீவு உருகிய விபத்து (அமெரிக்கா), மிக‌ப்பெரிய செர்னோபில் விபத்து (சோவியத் யூனியன், 1986) மற்றும் சமீபத்தில் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த விபத்து. முதல் விபத்து முழுக்க அரைகுறை தொழில்நுட்பத்தினால் நடந்தது. அடுத்த இரண்டு விபத்துக்களும் மனிதத் தவறுகளினால் நடந்தவை. 2011ன் ஃபுகுஷிமா விபத்துகூட அசாதாரண இயற்கை சீற்றத்தால் நடந்தது. பிரமாண்ட நில நடுக்கத்தின் அழுத்தச் சுமையும், முன் நிகழ்திராத சுனாமியின் நறுக்குச் சுமையும் இணைந்தது அரிதான நிகழ்வு.
அதே சமயம் உலகெங்கும் மேம்பட்ட தொழில்நுட்பமும் நிலையான உலை வடிவமைப்பும் நிச்சயம் தேவை. அறுபது ஆண்டுகளில் நடந்த நான்கு விபத்துகள் – தொல்லுயிரெச்ச கீழ்நிலை எரிபொருள்களைத் தாண்டிச்செல்ல‌ முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும் – இத்தொழில்நுட்ப‌த்தையே முழுமையாக‌க் கைவிடக் காரணமாகி விட‌க்கூடாது. மனித இனத்தின் மகத்தான நண்பனாக‌ இருக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மிகச் சிறப்பானவை கூடுதல் ஆபத்துடன்தான் வரும். கற்றலின் வாயிலாக அந்த ஆபத்தைக் தணிக்கும் முறைகளை உருவாக்குவதுதான் சரியான வழியே தவிர முதல் விபத்தைக் காரணம் காட்டி விஞ்ஞானத்தையே கலைத்து விடுவதல்ல.
சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். 1903ல் ரைட் சகோதரர்கள் மனிதர்கள் விமானத்தில் பறக்கும் அற்புதமான கனவை உண்மையாக்கினார்கள். அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 1908ல் முதல் விமான விபத்து நடந்தது. அதில் ஆர்வில்லி ரைட் படுகாயமடைய, உடன் பயணித்தவர் உயிரிழந்தார். நிறைய விபத்துகள் தொடர்ந்தன. இன்றைய தேதியில் கூட விமான விபத்துக்கள் ஒவ்வோர் ஆண்டும் 1,500 பேரை பலி வாங்குகிறது. 1908 விபத்தையோ, அதற்குப் பிற்பாடு நடந்தவற்றையோ காரணமாகக் காட்டி மனிதர்கள் பறப்பதைத் தடை செய்திருந்தால் நாம் தூரத்து நகரங்களிடையே, கடல்கள், கண்டங்கள் கடந்து பறந்து கொன்டிருக்க முடியுமா? 1912ல் பிரமாண்ட கப்பலான டைட்டானிக் கிளம்பிய‌போது பெரிய சொகுசுக் கப்பல்களின் துறையில் ஒரு முன்னோடித் திட்டமாகக் கருதப்பட்டது. ஆனால், தன் முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் போதி மூழ்கியது. 1,500 பேர் – கப்பலிலிருந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் – உயரிழந்தார்கள். ஆனால், மிகப்பெரிய அதிவேக ச‌முத்திரப் பயணங்களுக்கான தேடலை அது நிறுத்தி விடவில்லை.
மனிதனை நிலவுக்கு அனுப்பும் முதல் திட்டமான அப்போலோ-1 விபத்தில் சிக்கி, மூன்று முக்கிய விண்வெளி வீரர்களைப் பலி வாங்கியது. அடுத்து, 10 திட்டங்கள் கலவையான முடிவுகளை சந்தித்தபின், 1969ல் தான் அப்போலோ-11 இறுதியாக நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் பரப்பில் கால் பதித்ததும் அந்த மறக்கமுடியாத சொற்களை உலகுக்கு அறிவித்தார், “மனிதனுக்கு ஒரு சிறிய அடி; மனித இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்.” உண்மையில் அந்தச் சிறிய அடிக்கு முன்பாக பல தடுமாற்றங்கள் இருந்தன.
தற்போது உலகின் சிறந்தவற்றுள் ஒன்றாக வரிசைப்படுத்தப்படும் இந்திய விண்வெளித் திட்டம், 1978ல் ஒரு தோல்வியுடன்தான் தொடங்கியது. எங்கள் முதல் ஏவுகணை செயற்கைக்கோளை பூமிக்கு அருகிலான நீள்வட்டப்பாதையில் எடுத்துச் செல்வதற்குப் பதிலாக வங்காள விரிகுடாவில் விழுந்தது. நான் அந்த ஏவலின் திட்ட இயக்குநராக இருந்தேன். சில கோடிகளை கடலில் எறிந்தோம் எனத் தூற்றப்பட்டோம். அந்த ஒரு விபத்தோடும், விமர்சன‌ங்களோடும் எங்கள் கனவுகளை நாங்கள் முடித்துக் கொள்ளவில்லை. திட்டம் தொடர்ந்தது. அடுத்த வருடமே நாங்கள் வெற்றியடைந்தோம். தோல்வியோடு தொடங்கப்பட்ட அந்தத் திட்டம்தான் இன்று தனது சந்திரயான் திட்டம் மூலம் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கும் முதல் மற்றும் ஒரே திட்டம். தற்போது இது தேசத்தின் பெருமை. நிச்சயம் எல்லாத் தோல்விகளும் விபத்துகளும் செம்மையான சேவை புரிவதிலும் மேம்பட்ட பாதுகாப்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் நம்மை சிந்திக்க வைக்க‌ உந்துதலாக அமைகின்றன‌ என்பதுதான் வாதம். அணு சக்தி விஷ‌யத்தில் கதிர்வீச்சின் விளைவுகள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவைதாம். ஆனால், நமது அடுத்த அடி மேம்படுத்துதல்தானே ஒழிய தப்பித்தல் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக